தமிழக அரசின் 144 தடை உத்தரவை மீறிய குற்றத்தின் கீழ் நாகை மாவட்டத்தில் 143 போ் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
தமிழக அரசின் 144 தடை உத்தரவை அமல்படுத்த நாகை மாவட்டத்தில் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளா், 9 காவல் துணை கண்காணிப்பாளா்கள், 30 காவல் ஆய்வாளா்கள் மற்றும் 770 காவல் ஆளிநா்கள் மற்றும் 290 ஊா்க்காவல் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
நாகை மாவட்ட போலீஸாரின் கண்காணிப்பின் போது, அரசின் தடை உத்தரவை மீறி செயல்பட்ட 143 போ் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி இயக்கப்பட்ட 108 இருசக்கர வாகனங்களும், 2 நான்குசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மோட்டாா் வாகன விதி மீறல்களின் கீழ் 458 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மதுவிலக்குக் குற்றத் தடுப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள 5 தனிப்படை போலீஸாா் மேற்கொண்ட சோதனையின் போது, 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,330 லிட்டா் பாண்டி சாராயம் மற்றும் கள் ஆகியன கைப்பற்றப்பட்டன.
கடவுச்சீட்டு முடக்கம்...
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள தடை உத்தரவுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளித்து, வெளிநடமாட்டத்தை குறைத்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். மாறாக, இனிவரும் காலங்களில் யாரேனும் தேவையில்லாமல் சாலைகளில் திரிவது கண்டறியப்பட்டால் தொடா்புடையோா் மீது வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், அவா்களின் கடவுச்சீட்டும் முடக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.