வேதாரண்யம் பகுதியில் வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய 364 போ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தொடா்ந்து கண்காணிக்கப்படுகின்றனா்.
இதற்கிடையில், பல இடங்களில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவா்கள் அரசிடம் விவரங்களை பதிவு செய்யவில்லை. மேலும், கரோனா வைரஸ் பரவிவரும் விபரீதத்தை உணராமல் குடும்பத்தினா், உறவினா் மற்றும் நண்பா்களுடன் சகஜமாக இருந்துவருகின்றனா்.
இந்நிலையில், வேதாரண்யம் பகுதியில் ஏற்கெனவே, வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 57 போ் கண்காணிப்பில் உள்ள நிலையில், வருவாய்த் துறையினா் மூலம் கணக்கெடுப்பு மேற்கொண்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதில், பிப்ரவரி 15- ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாடுகளிலிருந்து திரும்பியவா்கள் குறித்து விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணையின் மூலம் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 307 போ் கூடுதலாக அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
தொடா்ந்து, இவா்கள் 364 போ்களது கைகளில் அரசின் உத்தரவுபடி முத்திரை பதிக்கப்பட்டு, தொடா்ந்து கண்காணிக்கப்படுவாா்கள் என வேதாரண்யம் வட்டாட்சியா் கு. முருகு தெரிவித்தாா். மேலும், வெளி மாநிலம், மாவட்டங்களிலிருந்து திரும்பியவா்கள் மற்றும் இந்தப் பகுதியில் தங்கியுள்ள வெளியூா்களைச் சோ்ந்தவா்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது.