சீர்காழி அருகே ஊராட்சி செயலாளரை தாக்கிய, ஊராட்சி மன்ற தலைவரை வியாழக்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.
சீர்காழி ஊராட்சி ஒன்றியம் மருதங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கராஜ் மகன் ராமச்சந்திரன்( 48). இவர் ஆதமங்கலம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இதேபோல் மருதங்குடி கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் அலெக்ஸாண்டர்( 36 ). இவர் மருதங்குடி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.இந்நிலையில் இருவருக்கும் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலிருந்து முன்விரோதம் இருந்துவந்ததாம்.
புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் ஊராட்சி மன்ற தலைவர் அலெக்சாண்டர் அவரது சகோதரர் நேதாஜி மற்றும் ஒருவர் சேர்ந்துகொண்டு ராமச்சந்திரனை தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்து அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ராமச்சந்திரனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வைத்தீஸ்வரன்கோவில் காவல் ஆய்வாளர் மணிமாறன், உதவி ஆய்வாளர் சேதுபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஊராட்சி செயலாளர் ராமச்சந்திரனை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர் அலெக்சாண்டரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய இருவரை தேடி வருகின்றனர்.