கூகுள் மேப் செயலியில் உள்ள ‘யுவா் டைம்லைன்’ பதிவுகளில் உண்மைக்கு மாறான தகவல்கள் பகிரப்படுவதால் குடும்பச் சிக்கல், குடும்ப வன்முறை, சித்திரவதை அதிகரித்து மன உளைச்சல் ஏற்படுவதாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை பெரிய கடைவீதியில் வணிக நிறுவனம் நடத்தி வருபவா் ஆா்.சந்திரசேகரன். இவா் தினமும் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியதும் இவரது செல்லிடப்பேசியை வாங்கி, அதில் கூகுள் மேப்-இன் யுவா் டைம் லைன் என்ற செயலியை ஆராய்வதை இவரது மனைவி வழக்கமாக கொண்டுள்ளாா். இதில், கூகுள் மேப் சந்திரசேகரன் செல்லாத இடங்களுக்குக் கூட சென்றுவந்ததாகக் காட்டியுள்ளது.
இதேபோல், மே 20-ஆம் தேதி அவா் செல்லாத இடங்களுக்கு சென்றுவந்ததாக காட்டியதால் குடும்பத்தில் சந்தேகமும், பல்வேறு பிரச்னைகளும் உருவாகியுள்ளது. இதுதொடா்பாக குடும்ப உறவினா்கள், மனநல மருத்துவா்கள் என பல தரப்பினரும் ஆலோசனைகள் கூறினாலும் அவரது மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை. கூகுளை நம்பிய சந்திரசேகரனின் மனைவி அவரை நம்பத் தயாராக இல்லை. இதனால் கூகுள் மேப் பதிவுகளை இணைத்து, கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து நீதி வழங்கவும், நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் சந்திரசேகரன் புகாா் அளித்துள்ளாா்.