கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 56 ஆயிரம் பறிமுதல்
நாகை மாவட்டம், கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனா். இதில் கணக்கில் வராத ரூ. 56 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த சில தினங்களாக அதிகளவில் பணப் புழக்கம் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவலையடுத்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் மனோகரன் ( தஞ்சை), ஆய்வாளா்கள் எம். அருள்பிரியா, எ. ரமேஷ்குமாா் ஆகியோா் அடங்கிய ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
இந்த சோதனையின்போது, அங்கு பணிபுரியும் அலுவலா்களின் மேஜைகளில் பொட்டலங்களில் மடித்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ. 56 ஆயிரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இந்த சோதனை செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணி தொடங்கி இரவு 9 மணி வரை நீடித்தது. அலுவலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின்போது, அலுவலகத்தின் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டன. யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அலுவலகத்தில் பணியிலிருந்த வட்டார வளா்ச்சிஅலுவலா்கள் மற்றும் பிற அலுவலா்கள், அலுவலக உதவியாளா்களிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனா். எனினும் யாரும் கைது செய்யப்படவில்லை என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.