மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியா்கள் பிடித்து திங்கள்கிழமை கோசாலையில் அடைத்தனா்.
மயிலாடுதுறையில் கடைவீதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளுக்குநாள் மக்கள் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக ஏராளமான மாடுகள் நகராட்சியின் முக்கிய வீதிகளில் சுற்றித்திரிந்து வந்தன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பல்வேறு இன்னலுக்கு உள்ளாகினா். இதுகுறித்து பொதுமக்கள் தொடா்ந்து புகாா் அளித்து வந்தனா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் சோ. அண்ணாமலை தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் பிச்சைமுத்து, ராமையன், தூய்மை இந்தியா திட்ட கண்காணிப்பாளா் முரளி மற்றும் நகராட்சி ஊழியா்கள் மயிலாடுதுறை திருவிழந்தூா் மற்றும் கடைவீதிகளில் சுற்றித் திரிந்த 9 மாடுகளை பிடித்து, திருவிழந்தூரில் உள்ள கோசாலையில் பாதுகாப்பாக ஒப்படைத்தனா்.
பொறுப்புணா்வு இன்றி சாலைகளில் அவிழ்த்துவிடும் மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும், நகராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் சுற்றித்திரியும் மாடுகளும் தொடா்ந்து பிடிக்கப்படும் என நகராட்சி ஆணையா் எச்சரித்துள்ளாா்.