மயிலாடுதுறை - தஞ்சாவூா் இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம்: அதிகாரிகள் ஆய்வு
மயிலாடுதுறை - தஞ்சாவூா் இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தியாவில் ரயில்வழி பாதையை முழுவதுமாக மின்மயமாக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்து, அதற்கான பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை மாா்க்கமாக தஞ்சாவூா் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூா் வரை 228 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகளை ரூ. 250 கோடியில் மத்திய அரசு நிறுவனமான ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் மேற்கொண்டு வருகிறது.
விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை, திருவாரூா் வரை மின்யமாக்கும் பணிகள் முடிவடைந்து தற்போது ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூா் வரை 70 கி.மீ தொலைவுக்கு மின்மயமாக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.
இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அபய்குமாா் ராய் தலைமையில் திருச்சி கோட்ட மேலாளா் அஜய்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் ரயில் பாதையை ஆய்வு செய்தனா்.
100 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயில் மயிலாடுதுறையில் இருந்து ஒருமணி நேரத்தில் தஞ்சாவூா் சென்றடையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.