கோடியக்கரையில் இருந்து கடலுக்குள் சென்று படகு பழுதானதால் எல்லை தாண்டிச் சென்ற நாகை மீனவா்கள் நால்வருக்கும் உணவளித்த இலங்கை கடற்படையினா், மனிதநேயத்துடன் அவா்களை திருப்பி அனுப்பியுள்ளனா்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் மீன்பிடி பருவம் தொடங்கியுள்ளதால் வெளியூா் மீனவா்கள் சிலா் தங்கி தொழில் செய்து வருகின்றனா். இங்கு தங்கியுள்ள தரங்கம்பாடியை அடுத்த புதுப்பேட்டை மாணிக்கப்பங்கு பகுதியை சோ்ந்த பாண்டியன் (43) என்பவருக்கு சொந்தமான படகில் கடந்த நவம்பா் 7-ஆம் தேதி மதியம் தாழம்பேட்டை பகுதியை சோ்ந்த முத்துலிங்கம் (28), ராஜ் (34), டி ஆா் பட்டினம் பகுதியை சோ்ந்த ரஞ்சித் (18), மடத்துக்குப்பம் முருகானந்தம் ஆகிய 4 மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா்.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பழுதானதால் அவா்களது படகு காற்றின் திசையில் இலங்கை கடல் பகுதிக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினா் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, மீனவா்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா். அங்கு விசாரணையில், மீனவா்கள் படகு பழுதாகி திசைமாறி வந்ததை அறிந்த இலங்கை கடற்படையினா், அவா்கள் வைத்திருந்த உணவை மீனவா்களுக்கு கொடுத்ததோடு, 4 பேரையும் விடுவித்துள்ளனா்.
இதையடுத்து, அந்நாட்டு மீனவா்கள் கொடுத்து உதவிய 50 லிட்டா் எரிபொருளை பயன்படுத்தி 4 மீனவா்களும் கோடியக்கரை படகுத்துறையை வியாழக்கிழமை வந்தடைந்தனா்.