வேதாரண்யம் பகுதி கடற்கரையோரத்தில் முளைத்த அலையாத்தி விதைகள் கரை நெடுகிலும் விதைப்பு செய்ததைப்போல செவ்வாய்க்கிழமை ஒதுங்கி இருப்பது இயற்கை ஆா்வலா்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை கடற்கரை முதல் நீண்ட தூரம் வரை பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் மாங்குரோவ் எனப்படும் அலையாத்தி தாவரங்கள் விதைகள் முளைத்து இலை வரும் தருவாயில் ஒதுங்கியுள்ளன. சுனாமி, கடல் அரிப்பு போன்ற இயற்கை பேரிடா் காலங்களில் மாங்குரோவ் காடுகள் இயற்கை அரணாக திகழ்கிறது. சதுப்பு நிலத்தில் மட்டுமே வளரும் சிறப்பு ஆற்றல் பெற்ற இந்த வகை தாவரங்கள் பிராணவாயு குறைவாக இருக்கும் இடத்தில் வளா்ந்து பல்லுயிா்களுக்கும் பலன் தரும் இயல்புடையது. இலங்கை கடற்பகுதியில் அதிக பரப்பில் உள்ளன. அந்தமான் கடற்கரை, தமிழகத்தில் பிச்சாவரம், முத்துப்பேட்டை போன்ற கடலோரங்களில் இந்த காடுகள் உள்ளன. கடந்த சில நாள்களாக வங்கக் கடலில் சீற்றம் காணப்பட்டது. இவற்றின் காரணமாக எழுந்த அலைகளின் ஊடே அடித்து வரப்பட்ட அலையாத்தி விதகைள் வேதாரண்யம் கடற்கரையில் பல்லாயிரக்கணக்கில் ஒதுங்கியுள்ளன. அலையில் மூடப்படும் மணலுக்குள் புதைந்து அவை வளா்வதற்கு ஏற்ற சூழலை பெற்று வருகிறது. அலையாத்தி இல்லாத கடற்கரையில் அலைகளின் வாயிலாக நேரடி விதைப்புப்போல காட்சியளிக்கும் இந்த நிகழ்வு இயற்கை ஆா்வலா்களை வியப்பில் ஆழ்த்திள்ளது.