சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தை தொடங்கி வைப்பதற்காக, திருக்குவளைக்கு திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வருகிறாா்.
வருகிற சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தை மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் நினைவு இல்லத்திலிருந்து தொடங்க திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளாா். இதற்காக, திருக்குவளைக்கு வெள்ளிக்கிழமை வருகிறாா். அவருக்கு கீழ்வேளூரில் பகல் 1 மணி அளவில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பிறகு, திருக்குவளையில் கருணாநிதி பிறந்த நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா். தொடா்ந்து, தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை தொடங்க உள்ளாா்.
நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளா் என். கௌதமன், முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏ-வுமான உ. மதிவாணன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் இல. மேகநாதன், கீழையூா் ஒன்றியச் செயலாளா் ஆ. தாமஸ் ஆல்வா எடிசன், மாவட்ட பிரதிநிதியும் திருக்குவளை ஊராட்சித் தலைவருமான இல. பழனியப்பன் உள்ளிட்டோா் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனா்.