வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் மீனவர்கள் தங்களது படகு, இன்சின், வலைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுச்செல்லும் பணியில் ஞாயிற்றுக்கிழமை தீவிரம் காட்டினர்.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த சில நாள்களில் புயலாக உருவெடுக்கும் வாய்யப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் புயல் தமிழக கிழக்கு கடற்கரையில் கரையை கடக்கவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதையடுத்து மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மீன்பிடிப் படகுதளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வேதாரண்யம், கோடியக்கரை மீன்பிடிப் படகுத்துறைகளில் வழக்கமாக நிறுத்தப்பட்டிருந்த படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுச் சென்றனர். பல மீனவர்கள் படகு மற்றும் வலைகளை வாகனங்களில் ஏற்றி தங்களுது வீடுகளுக்கே கொண்டுச்சென்றனர். இதேபோல, வேதாரண்யம் பகுதியில் 2018-ல் வீசிய கஜா புயலின் அனுபவத்தைத்கொண்டு மக்கள் தங்களது உடமைகளை பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை செய்து வருகின்றனர்.
தென்னை உள்ளிட்ட மரங்களில் கிளைகளை வெட்டுவது, கூரைகளில் பாலிதீன் பாய்களை கட்டுவது, சிமிண்ட் அட்டைகள், தகர அட்டைகளை கீழே இறக்குவது போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.