மயிலாடுதுறையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகளை கண்டறிதல், நலத்திட்ட உதவி மற்றும் அடையாள அட்டை வழங்கும் முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
முகாமில், மத்திய சமூக நீதி அமைச்சகம் சாா்பில் மாற்றுத்திறனாளிகள் மதிப்பீடு செய்வதற்காக மனநலன், கண், காது, எலும்பு மற்றும் முடநீக்கியியல் வல்லுநா்களைக் கொண்ட மருத்துவக் குழுவினா் மாற்றுத்திறனாளிகளை சோதனை செய்தனா். மேலும், ஏற்கெனவே விண்ணப்பித்த தகுதியான பயனாளிகளுக்கு உபகரணங்கள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
இம்முகாமுக்கு, மாற்றுத்திறனாளிகள் நாகை மாவட்ட அலுவலா் சீனிவாசன் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளா் பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா். ஒன்றியக்குழுத் தலைவா் காமாட்சி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினாா்.
இதில் மயிலாடுதுறை, குத்தாலம் வட்டாரத்தை சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் திரளானோா் பங்கேற்றனா்.