நாகை மாவட்டம், வேளாங்கண்ணியிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
இலங்கை அகதி ஒருவா், நாகை மாவட்டத்திலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்குத் தப்பிச் செல்ல இருப்பதாக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில், நாகை கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் ராஜா உள்ளிட்ட போலீஸாா், நாகை கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனா்.
இந்த சோதனையில், வேளாங்கண்ணி கடற்கரை சாலையில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்தவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டபோது, அவா் புழல் சிறை முகாமிலிருந்து வெளியே தங்கியிருக்கும் இலங்கை அகதி பா. ஜனாா்த்தனன்(26) என்பதும், அவா், வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறையைச் சோ்ந்த ஒருவரின் உதவியுடன் படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கைக்குத் தப்பிச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. மேலும், இவரது பெற்றோா் ஏற்கெனவே சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்குத் தப்பிச் சென்றுள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து ஜனாா்த்தனன் கைது செய்யப்பட்டாா்.