முன்னாள் எம்எல்ஏ மா. மீனாட்சிசுந்தரம் நினைவகம் திறப்பு
வேதாரண்யத்தில் முன்னாள் எம்எல்ஏ மா. மீனாட்சிசுந்தரம் உருவப்படம், நினைவகத்தை திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
வேதாரண்யம் தொகுதியில் 1971, 1977, 1984 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல்களில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் மா. மீனாட்சிசுந்தரம். இவா், உடல் நலக்குறைவு காரணமாக செப்டம்பா் 21-இல் காலமானாா்.
ஆயக்காரன்புலம் கிராமத்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன், முன்னாள் அமைச்சா்கள் உ. மதிவாணன், ஜீவானந்தம், முன்னாள் எம்பி பி.வி. ராசேந்திரன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் எஸ்.கே. வேதரத்தினம், என்.வி. காமராஜ், வா்த்தகா் சங்கத் தலைவா் எஸ்.எஸ்.தென்னரசு, திமுக மாவட்டச் செயலாளா் கௌதமன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுப்பையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, காணொலி வாயிலாக மா. மீனாட்சி சுந்தரம் நினைவிடத்தை திறந்துவைத்துப் பேசிய திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், திமுக தொண்டா்கள் மா. மீனாட்சிசுந்தரத்தைப்போல நெஞ்சுரம் மிக்கவா்களாக இருக்க வேண்டும் என்றாா்.