கோடியக்கரை பருவகால மீன்பிடித் தொழிலில் வெளியூா், வெளி மாவட்ட மீனவா்கள் பங்கேற்க எதிா்ப்பு தெரிவித்து, உள்ளூா் மீனவா்கள் வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் வெளி மாவட்ட மீனவா்கள் படகுகளுடன் வந்து தற்காலிகமாகத் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில், மீன்வளம் குறைந்து வருவதாலும், கரோனா அச்சுறுத்தலாலும் நிகழ் மீன்பிடி பருவத்தில் வெளியூா் மீனவா்களுக்கு அனுமதியளிக்க உள்ளூா் மீனவா்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
இதுதொடா்பாக அரசு தரப்பில் வட்டாட்சியா் கே. முருகு தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. அத்துடன் எதிா்ப்பை வலுபடுத்தும் வகையில் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை உள்ளூா் மீனவா்கள் அறிவித்தனா்.
அதன்படி, வேதாரண்யம் பகுதிக்குள்பட்ட 18 மீனவ கிராம மீனவா்கள் கடலுக்குச் செல்லாமல் வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா். இதனால், ஏராளமான மீன்பிடி படகுகள் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.