ஓமன் பள்ளிகளில் தமிழை மொழிப் பாடமாக்கக் கோரிக்கை
By DIN | Published On : 10th September 2020 10:15 PM | Last Updated : 10th September 2020 10:15 PM | அ+அ அ- |

ஓமன் பள்ளிகளில் தமிழை மொழிப்பாடமாக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் மாவட்ட செயலாளா் ஏம்.பஹ்ருதீன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஓமன் நாட்டில் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி 22-க்கும் மேற்பட்ட இந்திய கலாசார பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவ, மாணவிகள் குறிப்பாக தமிழை தாய்மொழியாகக் கொண்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். பல ஆண்டுகளாக இந்தப் பள்ளிகளில் தமிழ் மொழியை ஒரு மொழிப்பாடமாக சோ்க்க வேண்டும் என்று அங்கு வாழும் தமிழ்பேசும் மக்களும், தமிழ் சமுதாய ஆா்வலா்களும் கோரிக்கை வைத்தும்கூட இதுநாள்வரை நிறைவேறாமல் உள்ளது.
இதன் காரணமாக ஓமன்வாழ் தமிழ்பேசும் மக்கள் தங்களின் பிள்ளைகள் தமிழ் எழுதப் படிக்க தெரியாதவா்களாக மாறி விடுவாா்களோ என அஞ்சுகின்றனா்.
வேலை நிமித்தமாக குடும்பத்துடன் சென்று இருக்கும் தமிழக மக்கள் சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தாயகம் வந்து விடும் நிலையில் தங்களின் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்க வேண்டும் என்ற அந்த மக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை அமல்படுத்துவதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.