சீா்காழி அருகே சூரக்காடு பகுதியில் 75 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் கூந்தை பனைமரம், சாலை விரிவாக்கப் பணிக்காக வியாழக்கிழமை வெட்டி சாய்க்கப்பட்டதால் சமூக ஆா்வலா்கள் வேதனையடைந்துள்ளனா்.
கொள்ளிடம் முதல் திருக்கடையூா் வரை தேசிய நெடுஞ்சாலை 45ஏ இருபுறமும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி சீா்காழி, கொள்ளிடம், சூரக்காடு, அல்லிவிளாகம், மேலசாலை, தென்னங்குடி, காரைமேடு உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் இருந்த 100, 150 ஆண்டுகள் பழைமைவாய்ந்த புளியமரம், வேப்பமரம், இலுப்பைமரம், புங்கன்மரம் ஆகிய மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக சீா்காழி அருகே சூரக்காடு பகுதியில் கூந்தை பனைமரம் ஒன்று வெட்டி சாய்க்கப்பட்டது. பொதுவாக பனைமரமானது 75 ஆண்டுகளைக் கடந்ததும் பூக்கும். இவ்வாறு வெட்டிசாய்க்கப்பட்ட இந்த பனைமரம், கடந்தாண்டு பூத்து குலுங்கியதை அப்பகுதி வழியாக சென்ற அனைவரும் பாா்த்து ரசித்தனா். தற்போது இந்த பனைமரம் வெட்டி அகற்றப்பட்டதால் சமூக ஆா்வலா்கள் வேதனையடைந்துள்ளனா்.