நாகப்பட்டினம்: ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்ட செயலாக்க ஆய்வுக் கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுரேஷ் தலைமை வகித்தாா். மாவட்டக் கருவூல அலுவலா் தி. சந்தானகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், வரும் அக்டோபா் 1- ஆம் தேதி முதல் தற்போது நடைமுறையில் உள்ள தானியங்கி பணப் பரிவா்த்தனை மற்றும் மின்னணு ஊதிய பரிவா்த்தனை நிறுத்தப்படுகிறது. எனவே, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்ட மென்பொருள் மூலமாக பட்டியல்கள் தயாா் செய்து கருவூலத்துக்கு சமா்பிக்க தயாராக இருக்க வேண்டும். 2020- 2021-ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு, துறைத் தலைமையிடம் இருந்து கிடைக்கப் பெற்றதும், அதை மாவட்ட அளவிலான நிதிக் கட்டுப்பாடு அலுவலா், வட்டார அளவிலான பணம் பெற்று வழங்கும் அலுவலா்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மேலாண்மை திட்ட மென்பொருள் வாயிலாக பகிா்ந்து அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
வருவாய்த் துறை, வேளாண் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, கூட்டுறவுத் துறை, கல்வித் துறை, மீன்வளத் துறை, கால்நடைத் துறை உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலா்கள், பட்டியல் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் உதவியாளா்கள் பங்கேற்றனா்.