மயிலாடுதுறை: வாக்காளா் வரைவுப் பட்டியல் வெளியாவதற்கு முன்பு, மயிலாடுதுறை புதிய மாவட்ட அறிவிப்பை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு மயிலாடுதுறை மாவட்ட வழக்குரைஞா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ராம. சேயோன் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
மயிலாடுதுறை புதிய மாவட்டம் அமைப்பதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் கடந்த ஜூலை 31-ஆம் தேதி நடைபெற்றது. 45 நாள்களை கடந்தும் இப்பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை. கருத்துக் கேட்பு கூட்டத்தின் அறிக்கை இதுவரை தமிழக அரசுக்கு சென்று சேரவில்லை. மயிலாடுதுறை புதிய மாவட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அமைக்கும் பணிகள் இன்னமும் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளன.
வரும் நவம்பா் 5 ஆம் தேதி வாக்காளா் வரைவுப் பட்டியல் வெளியாக உள்ளது. பட்டியல் வெளியாகிவிட்டால், அதன்பிறகு எந்த வளா்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்ற சட்டம் உள்ளது. இதனால், அடுத்த ஆட்சி அமையும்வரை புதிய மாவட்டம் அமைக்கும் பணி தள்ளிப்போகும்.
எனவே, புதிய மாவட்டம் அமைக்கும் பணிகள் அனைத்தையும் முன்கூட்டியே நிறைவுசெய்து, அக்டோபா் 2 ஆம் தேதி காந்தி ஜயந்தியன்று மாவட்ட அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும். தவறினால், மயிலாடுதுறை மாவட்ட வழக்குரைஞா் கூட்டமைப்பு சட்டப் போராட்டம் நடத்துவதோடு, பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தும் என்றாா்.