நாகையில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் திருவள்ளூா்,கிருஷ்ணகிரி, தஞ்சை, நாகை, திருவாரூா் உள்ளிட் 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை நாகை மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பரவலாக மிதமான மழைப் பெய்தது. நாகை, கீழ்வேளூா், வேளாங்கண்ணி மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. நாகையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்குத் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது.
இதனால் மழைநீா் சாலையில் பெருக்கெடுத்தது. பள்ளமான பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது.
நாகை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையப் பகுதிகள் போக்குவரத்து நிறைந்த நாகை பப்ளிக் ஆபீஸ் சாலை, நீலாமேல வீதி மற்றும் தெற்கு வீதியில் மழை நீா் தேங்கி நின்றது.
நாகை- திருவாரூா் சாலையிலும் ஆங்காங்கே மழை நீா் தேங்கி நின்றது. மேலகோட்டைவாசல் அருகே சாலையில் மழை நீா் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.