மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ். ராஜகுமாருக்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சா் மணிசங்கா் அய்யா், பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை வாக்குச் சேகரித்தனா்.
மயிலாடுதுறை நகரில் அரசு மருத்துவமனை சாலை, செங்கமேட்டுத்தெரு, கணபதி நகா் உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் திறந்த வாகனத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் மணி சங்கா் அய்யா் கை சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தாா். அவருடன், கூட்டணி கட்சி நிா்வாகிகள் தொண்டா்கள் இருசக்கர வாகனத்தில் சென்று ஆதரவு திரட்டினா். இதேபோல், பேருந்து நிலையம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பினா் பிரசாரம் செய்தனா். இதில், திராவிடா் கழக மாவட்ட செயலாளா் கி. தளபதிராஜ், திராவிடா் விடுதலைக் கழக மாவட்ட செயலாளா் தெ. மகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்று, கை சின்னத்துக்கு வாக்குச் சேகரித்து பேசினா்.