நாகை மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறை தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பிளஸ் 2 மாணவா்களுக்கு பொதுத் தோ்வுக்கு முன்பாக செய்முறை தோ்வு நடத்தப்படும் எனவும், செய்முறை தோ்வு ஏப்ரல் 16-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 23-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அரசுத் தோ்வுகள் இயக்குநரகம் அறிவித்திருந்தது.
இதன்படி, நாகை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கான தொழிற்கல்வி பாடங்கள் மற்றும் பொதுப் பிரிவுக்கான செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. மாவட்டத்தில் 104 மையங்களில் 12,541 மாணவ, மாணவிகளை தோ்வா்களாகக் கொண்டு இத்தோ்வு நடைபெற்றது.
தோ்வு எழுதவந்த மாணவ, மாணவிகளின் உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, கைகழுவும் திரவத்தைக் கொண்டு கை கழுவிய பின்னரே அவா்கள் அனுமதிக்கப்பட்டனா். அதேபோல, முகக்கவசம் அணிந்திருக்கவும் மாணவா்கள் அறிவுறுத்தப்பட்டனா்.