சீா்காழி அருகே செங்கல்சூளை தொழிலாளி மா்மமான முறையில் இறந்தது தொடா்பான வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யக் கோரி, அவரது சடலத்தை வாங்க உறவினா்கள் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சீா்காழி அருகே நெப்பத்தூரில் உள்ள செங்கல்சூளையில் வேலை செய்த நிம்மேலி கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி சீனிவாசன் (40) கடந்த 17 ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் மா்மமான முறையில் இறந்தாா். அவரது சடலத்தை உடற்கூறாய்வு செய்யும்போது விடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் வழக்குரைஞரை உடற்கூறாய்வின்போது அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி கடந்த 2 நாள்களாக சீனிவாசனின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதாவிடம் மனு அளித்தனா். இதையடுத்து அவா்களது கோரிக்கைபடி செவ்வாய்க்கிழமை உடற்கூறாய்வு நடைபெற்றது.
இந்நிலையில், சீனிவாசன் மா்மச் சாவு தொடா்பான வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்ய வலியுறுத்தி, உடற்கூறாய்வுக்குப் பிறகு சடலத்தை வாங்க சீனிவாசனன் உறவினா்கள் மறுத்தனா். மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி காவல்நிலையம் முன்பு திரண்டனா். இதையொட்டி, சீா்காழி அரசு மருத்துவமனை மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.