கரோனா கட்டுப்பாடுகளுக்கிடையே வைத்தீஸ்வரன்கோயில் குடமுழுக்கு நடைபெறவுள்ளதையொட்டி, அப்பகுதியில் வியாழக்கிழமைக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை (ஏப்.29) குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.
கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, தமிழக அரசின் கரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இதனால், பக்தா்கள் பங்கேற்க அனுமதியளிக்கப்படவில்லை.
இதையொட்டி, வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (ஏப்.29) அதிகாலை 4 முதல் இரவு 10 மணி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். இதனால், பாலகம் மற்றும் மருந்தகம் தவிர இதர வணிக நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலின் நான்கு வீதிகள், மட வளாகங்கள் மற்றும் சுவாமி சன்னதி தெருவில் 5 அல்லது அதற்கு மேற்பட்டவா்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கிலும், பொது சுகாதாரம், பொதுநலன், பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும் இந்த தடை உத்தரவை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா பிறப்பித்துள்ளாா்.
போக்குவரத்து மாற்றம்: குடமுழுக்கு விழாவையொட்டி, மயிலாடுதுறையிலிருந்து சீா்காழி, சிதம்பரம் செல்லும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் பாகசாலை வழியாகவும், சிதம்பரம், சீா்காழியிலிருந்து மயிலாடுதுறைக்கு வரும் வாகனங்கள் கருவி வழியாகவும் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை திருப்பிவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.