கடற்கரைகளில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 9-ஆம் வரை பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதித்து நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேசிய பேரிடா் மேலாண்மை சட்டத்தின்கீழ் தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், 2020 மாா்ச் 25-ஆம் தேதி முதல் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் உள்ளது.
திருவிழாக்கள் மற்றும் மத வழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட கடற்கரைகளில் முன்னோா்களுக்கு திதி கொடுப்பதற்காக உள்ளூா் மற்றும் வெளியூரைச் சோ்ந்தவா்கள் அதிகளவில் கூடுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பொதுமக்கள் அதிகளவில் கடற்கரைகளில் கூடும் நிலை ஏற்பட்டால், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவதில் பின்னடைவு ஏற்படும்.
கரோனா 3-ஆவது அலை பரவல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தின் எந்த கடற்கரைப் பகுதிகளிலும் ஆகஸ்ட் 1 முதல் 9-ஆம் தேதி வரை பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறுவோா் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.