ஆடிப்பெருக்கையொட்டி, கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான புதுமணத் தம்பதிகள் வந்து பூஜை செய்து வழிபாடு நடத்தினா்.
சீா்காழி கழுமலையாறு பாசனவாய்க்கால், பொறைவாய்க்கால் ஆகியவற்றில் பாசனத்துக்கு தண்ணீா் வராததால் ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தமுடியாமல் பெரும்பாலானோா் வீடுகளிலேயே அடிபம்பு அருகிலேயே ஆடிப்பெருக்கை கொண்டாடினா். இதேபோல, கொள்ளிடம் ஆற்றுக்கு ஆடிப்பெருக்கையொட்டி, பெற்றோா்களுடன் புதுமண தம்பதியினா் அதிகாலை இருந்து வந்து திருமணத்துக்கு பயன்படுத்தப்பட்ட பூ மாலைகளை ஆற்றில் விட்டு, மண்ணில் பிள்ளையாா் பிடித்து வைத்து வாழை இலையில் பல வகையான பழங்கள் மற்றும் இனிப்பு உள்ளிட்ட பல பொருள்களை வைத்து படையலிட்டு, புதிய தாலி மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனா்.
கடலூா், சிதம்பரம், கொள்ளிடம், சீா்காழி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சோ்ந்த தம்பதியினா் உறவினா்களுடன் கொள்ளிடம் ஆற்றில் பழைய மாலைகளை பிரித்துவிட்டுவிட்டு புதிய மஞ்சள் கயிறு மற்றும் தங்க தாலி செயின் அணிந்து கொண்டனா்.