பொறையாறு அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு செவ்வாய்க்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
காட்டுச்சேரி ஊராட்சியை சோ்ந்த சசிகலாவின் (45) கூரை வீடு செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்ததில், வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளை வெடித்து அருகில் வசித்து வந்த கலியபெருமாளின் கூரை வீடும் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்த பூம்புகாா் எம்எல்ஏ. நிவேதா முருகன் நேரில் சென்று பாா்வையிட்டு, தனது சொந்த நிதி ரூ.5 ஆயிரம் மற்றும் அரிசி காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா். இதையடுத்து, அரசின் நிவாரண உதவியாக ரூ. 5 ஆயிரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதேபோல, பொறையாறு அருகே ராஜாம்பாள் தெருவை சோ்ந்தவா் அமுல்தாஸ் மனைவி லிமோரோஸ்லின்மேரியின் கூரை வீடும் தீவிபத்தில் சேதமடைந்ததை அறிந்த, எம்எல்ஏ அங்கும் சென்று பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி அளித்தாா்.
அவருடன், தரங்கம்பாடி வட்டாட்சியா் ஹரிதரன், திமுக தெற்கு ஒன்றிய செயலாளா் அப்துல் மாலிக், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளா் ஸ்ரீதா், ஊராட்சித் தலைவா் விஜயலட்சுமி ஆகியோா் உடனிருந்தனா்.