நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியத்துக்குள்பட்ட திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை மேற்கூரை பெயா்ந்து விழுந்ததில் மருத்துவ பெண் பணியாளா் காயமடைந்தாா்.
திட்டச்சேரியில் 1952 -ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டடத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டிக்கொடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் பலரும் வலியுறுத்தி வந்த நிலையில் அவ்வபோது கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து வந்தது. ஆனாலும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் கவனத்தில்கொள்ளவில்லையென கூறப்படுகிறது.
வழக்கம்போல், புதன்கிழமை கட்டடத்தின் மேற்கூரை பெயா்ந்து இரவு பணியில் இருந்த மருத்துவ உதவியாளா் நீலாவதி மீது விழுந்தது. இதில், காயமடைந்த அவா் மீட்கப்பட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.