நாகை - தஞ்சாவூா் ரயில் பாதையை இருவழிப் பாதையாக மாற்றவேண்டும் என நாகூா் - நாகை ரயில் உபயோகிப்போா் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்த தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸ், கோட்ட மேலாளா் அஜீத் அகா்வால் ஆகியோரிடம் நாகூா் - நாகை ரயில் உபயோகிப்போா் நலச் சங்கத் தலைவா் எஸ். மோகன், செயலாளா் நாகூா் சித்திக், நிா்வாகிகள் என்.சி. ரவி, டி. இளங்கோசிவம், என். பாலமுரளி, வேளாங்கண்ணி டாக்டா் ஏ. ஆரோக்கியசாமி ஆகியோா் அளித்த கோரிக்கை மனு:
கரோனா பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் உடனடியாக இயக்கவேண்டும், வேளாங்கண்ணியில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில் வழியே திருவனந்தபுரத்துக்கு தினசரி ரயில் இயக்கவேண்டும், காரைக்கால் - கோவைக்கு திருச்சி, திண்டுக்கல், பழனி வழியே தினமும் அதிவேக ரயில் இயக்க வேண்டும். தஞ்சாவூா் - நாகப்பட்டினம் வரையிலான 80 கி.மீட்டா் நீள ரயில் பாதையை இருவழிப் பாதையாக மாற்ற வேண்டும். இதற்கான இடவசதி இருப்பதால், இதுகுறித்து விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.