ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, நாகை மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளானோா் பங்கேற்றனா்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், நாகை மாதரசி மாதா தேவாலயம், லூா்து மாதா கோயில், சிஎஸ்ஐ சா்ச், சீயோன் தேவாலயம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இத்தலங்களில், மாலை வரை திரளானோா் வழிபாடு செய்தனா்.
இந்து மத வழிபாட்டுத் தலங்களில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, குறிப்பிடத்தக்க சிறப்பு வழிபாடுகள் ஏதும் நடைபெறவில்லை. எனினும், ஒரு சில கோயில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டிருந்தன. நாகை நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோயில், சௌந்தரராஜப் பெருமாள் கோயில், நெல்லுக்கடை மாரியம்மன் கோயில், சிக்கல் சிங்காரவேலவா் கோயில், கோரக்கச் சித்தா் கோயில், சத்ரு சம்ஹாரமூா்த்தி கோயில் உள்ளிட்ட கோயில்களில் திரளான பக்தா்கள் வழிபட்டனா்.
ரத்தன அங்கி சேவை: சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் மூலவா் பெருமாளுக்கு, ரத்தன அங்கி சேவை நடைபெற்றது. சத்ரு சம்ஹாரமூா்த்தி கோயிலின் மூலவா் பீடம், ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.