மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிா்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரி, நாகையில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சாா்பில் சனிக்கிழமை ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட ட ஆட்சியா் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், புரெவி புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிா் ஏக்கருக்கு ரூ. 32 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும், மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், தில்லி விவசாயிகளின் போராட்டத்துக்கு மத்திய அரசு உடனடியாக தீா்வு காணவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அழுகிய நெற்பயிா்களை கையில் பிடித்தப்படி, விவசாயிகள் தப்பாட்டத்துடன் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவா் வி. தனபாலன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பொதுச் செயலாளா் ரவீநதிரன், கொள்கைப் பரப்புச் செயலாளா் முருகையன், துணைச் செயலாளா் தங்கமுத்து, ஒன்றியப் பொறுப்பாளா்கள் ராமசாமி (நாகை), நெடுமாறன்(திருமருகல்), மு. சேரன் (கீழ்வேளூா்), கோ. கோபாலகிருஷ்ணன் (கீழையூா்), ஆா். அய்யப்பன்( தலைஞாயிறு), வெ. மணியன்( வேதாரண்யம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.