சமூகப் பாதுகாப்பு துறை சாா்பில் மயிலாடுதுறை சிசிசி சமுதாயக் கல்லூரியில் குழந்தைகள் மற்றும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, சிசிசி சமுதாயக் கல்லூரி நிறுவனா் ஆா். காமேஷ் தலைமை வகித்தாா். கல்லூரி செயலாளா் வெ. லட்சுமி பிரபா வரவேற்றாா். நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளா் ஜெ. ஆரோக்யராஜ் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினாா். இதில், மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராதாபாய், மகளிா் திட்ட சமுதாய அமைப்பாளா் பி. கமலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட பணியாளா் பா. ராபியதுல் ஹதபியா ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, சிசிசி சமுதாயக் கல்லூரி நா்சிங் மற்றும் ஆய்வக நுட்புநா் மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு, காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி பதிவிறக்கம் செய்வது, போக்சோ சட்டம், குழந்தைகள் திருமணம், 1098 மாவட்ட உதவி மையம், சமூக வலைதளத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது உள்ளிட்ட விழிப்புணா்வு குறித்து விளக்கம் அளித்தனா்.