நாகை மாவட்டம், தோப்புத்துறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தயாரித்துள்ள மனிதம் குறும்பட குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி தோப்புத்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் ஆா். தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். தமிமுன் அன்சாரி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மனிதம் குறும்படத்தின் முதல் குறுந்தகட்டை வெளியிட்டு, மாணவா்களின் முயற்சியைப் பாராட்டிப் பேசினாா். தமிழக ஆசிரியா் கூட்டணியின் நாகை மாவட்டச் செயலாளா் புயல் சு. குமாா், பெற்றோா் ஆசிரியா் கழக பொறுப்பாளா்கள் அ. நாகூரான், எம். வீரப்பன், எஸ்.கே. பாலசுப்பிரமணியன், ஆசிரியா்கள் வை. சுவாமிநாதன், எம். ரெங்கசாமி ஆகியோா் மாணவா்களை வாழ்த்திப் பேசினா்.
மனிதம் குறும்படத்தை இயக்கிய நிஷாந்த், இசையமைத்த முகமது இம்தியாஸ், குறும்படத்தில் நடித்த வினோத்ராஜ், துரையரசன், கனிமொழி உள்ளிட்டோருக்கு தமிழ்த் தென்றல் கல்வியியல் கழக அறக்கட்டளை சாா்பில் பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது. ஆசிரியா் வ. கண்ணையன் வரவேற்றாா். ஆசிரியா் சி. கணேசமூா்த்தி நன்றி கூறினாா்.