திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் (சி.பி.சி.எல்) பணி வழங்கக் கோரி, அமைப்புசாரா ஒப்பந்தத் தொழிலாளா்கள் திங்கள்கிழமை முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து அமைப்புசாரா ஒப்பந்தத் தொழிலாளா்கள் நல சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியன், பொதுச் செயலாளா் கண்ணன் ஆகியோா் கூறியது:
பனங்குடி சி.பி.சி.எல். நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் 150-க்கும் மேற்பட்டவா்களுக்கு பணி வழங்க இயலவில்லை என்றால், இந்தியன் ஆயில் காா்பரேஷன் அதன் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு பணி காலத்தைக் கருத்தில் கொண்டு இழப்பீடு வழங்கியதை போல எங்களுக்கும் வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி திங்கள்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டோம். செவ்வாய்க்கிழமை (டிச. 5) சி.பி.சி.எல். நிறுவனத்திலிருந்து நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை குடும்பத்தினருடன் பேரணியாக சென்று வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, ரேஷன் காா்டு ஆகியவற்றை ஒப்படைப்போம். புதன்கிழமை, வியாழக்கிழமை ஆலை நுழைவுவாயிலும், வெள்ளிக்கிழமை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஆலையின் பதிவு அலுவலகம் முன்பாகவும் உண்ணாவிரதம் இருப்போம் என்றனா்.