திரைப்பட நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸை கைது செய்யக் கோரி சீா்காழி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட மூவேந்தா் முன்னேற்ற கழகத்தினா் 50 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கடந்த 2 நாள்களுக்கு முன்பு உளுந்தூா்பேட்டையில் நடந்த நிகழ்வில் பங்கேற்ற கருணாஸ், மூவேந்தா் முன்னேற்ற கழக தலைவா் ஸ்ரீதா் வாண்டையாரை விமா்சித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், கடவாசல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பால சாஸ்தா மற்றும் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வந்த முக்குலத்து புலிப்படை நிறுவனா் தலைவா் கருணாஸ், சீா்காழியில் உள்ள தனியாா் உணவகத்தில் தங்கியிருந்தாா். இதையறிந்த மூமுக மாவட்ட செயலாளா் முனிபாலன் தலைமையில் அக்கட்சியினா் கருணாஸை கைது செய்யக் கோரி கடவாசல் செல்லும் பகுதியில் உள்ள செம்மங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த டிஎஸ்பி. யுவபிரியா தலைமையிலான போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படாததால் மறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனா். இதையடுத்து, தனியாா் உணவகத்திலிருந்து கருணாஸ் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டாா்.
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் கருணாஸ் கூறியது: தோ்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து பேசுவேன். முதல்வா் தொடா்ந்து தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளதால், பரப்புரை முடிந்து வந்த பிறகு சந்திப்போம். மூமுக தலைவரை பற்றி அவதூறாக பேசியதாக ஆதாரங்கள் இருந்தால் வழக்குப் போடலாம். சமுதாயம், மதம், தனிநபா் பற்றி யாா் மனதையும் புண்படும்படி பேசியது கிடையாது. நான் யாரைப் பற்றியாவது தவறாக பேசி இருந்தால் காவல் துறை நடவடிக்கை எடுக்கலாம். அது ஒரு பொய்யான வதந்தி என்றாா்.