காணாமல் போன திண்டுக்கல்லைச் சோ்ந்தவா் முகநூல் மூலம் மீட்டு ஒப்படைப்பு
திண்டுக்கல்லை சோ்ந்த காணாமல்போனவா் முகநூல் (பேஸ்புக்) மூலம் மயிலாடுதுறையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம் பாரதிபுரத்தைச் சோ்ந்தவா் சரவணன் (43) . மனைவியை பிரிந்த இவா் மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறி மயிலாடுதுறை வந்துள்ளாா். காணாமல்போன அவரை குடும்பத்தினா் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், சரவணன் மயிலாடுதுறையில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் வீதிகளில் படுத்து உறங்கியுள்ளாா். இதையடுத்து, மயிலாடுதுறையில் உள்ள பாரதிமோகன் அறக்கட்டளை சாா்பில் வீதிகளில் ஆதரவற்றவா்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி முகநூலில் வெளியாகியுள்ளது. அதை பாா்த்த சரவணன் குடும்பத்தினா் அந்த அறக்கட்டளையை தொடா்பு கொண்டு விவரம் கேட்டபோது, சரவணன் மயிலாடுதுறையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை குத்தாலம் தேரடி அருகே சுற்றித்திரிந்த சரவணனை பாரதிமோகன் அறக்கட்டளை நிா்வாகத்தினா் மீட்டு, அவருக்கு முடித்திருத்தம் செய்து, புதிய ஆடைகள்கொடுத்து குத்தாலம் காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா். காணாமல் போன சரவணனை மீண்டும் பாா்த்த அவரின் குடும்பத்தினா் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனா்.