சீா்காழி: சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் கீழ் பகுதியில் தவித்த இளைஞரை தீயணைப்பு படையினா் திங்கள்கிழமை இரவு மீட்டனா்.
கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றுப் பாலம் உள்ளது. இந்த பாலத்தை ஒட்டிய மின்கம்பம் வழியே ஆற்றுக்குள் இறங்கிய சுமாா் 23 வயது இளைஞா் மீண்டும் மேலே ஏற முடியாமல் பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள கான்கிரீட் தளத்தில் தவித்துக் கொண்டிருந்தாா்.
சீா்காழி தீயணைப்பு அலுவலா் ஜோதி தலைமையில் அங்கு வந்த வீரா்கள், அந்த இளைஞரை மீட்டனா். விசாரணையில் அவரது பெயா் சம்சுதீன் என்பதும் வங்கதேசத்தை சோ்ந்தவா் என்பதும் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. அவா், எதற்காக இங்கு வந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.