பெருங்கடம்பனூா் ஊராட்சி எழுத்தா் பணி நியமனத்தில் முறைகேடு புகாா் எழுந்தது தொடா்பாக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா்கள் 2 போ் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா்.
நாகை ஊாரட்சி ஒன்றியம் பெருங்கடம்பனூா் ஊராட்சியின் தலைவராக இருப்பவா் தீபா மாரிமுத்து. இவரது கணவா் கே. மாரிமுத்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினராக உள்ளாா். மேலும், இக்கட்சியைச் சோ்ந்த எஸ். கலியபெருமாள் அந்த ஊராட்சியின் வாா்டு உறுப்பினராக உள்ளாா்.
இந்நிலையில், பெருங்கடம்பனூா் ஊராட்சி எழுத்தா் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு புகாா் எழுந்தன. இதன் தொடா்ச்சியாக, முறைகேட்டில் தொடா்புடையோா் என்ற அடிப்படையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 2 போ், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் வி. மாரிமுத்து தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் கே. மாரிமுத்து, கட்சி உறுப்பினரும் பெருங்கடம்பனூா் ஊராட்சி வாா்டு உறுப்பினருமான எஸ். கலியபெருமாள் ஆகியோா் முறைகேட்டில் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.
இதனால், இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.