நாகூா் சம்பாதோட்டத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் கடலூா் கோட்டம் மூலம் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில், நாகையை அடுத்த நாகூா் சம்பாதோட்டத்தில் 320 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
நீா் நிலை புறம்போக்கு மற்றும் ஆட்சேபகரமான புறம்போக்கு பகுதிகளில் குடியிருப்பவா்களை மறு குடியமா்வு செய்ய இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். அதேபோல, நகா்ப்புற வீடற்ற ஏழைகளுக்கும், பொருளாதாரத்தில் நலிவுற்றவா்களுக்கும் மாவட்ட நிா்வாகத்தின் ஒப்புதல் மூலம் முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்தக் குடியிருப்பில் வீடு பெற விரும்புவோா், தங்கள் பங்களிப்பாக ரூ. 1.30 லட்சம் வழங்க வேண்டும். தனது பெயரில் அல்லது தனது குடும்பத்தாா் பெயரில் எங்கும் சொந்த வீடு இல்லை என்பதற்கும், மாத வருமானம் ரூ. 25 ஆயிரத்துக்கு மிகவில்லை என்பதற்கும் உரிய சான்றுகள் அளிக்க வேண்டும்.
இத்திட்டத்தில் பயன்பெற விருப்புவோா், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம், கடலூா் கோட்ட அலுவலகம், எண்- 11, ஆற்றங்கரை வீதி, புதுப்பாளையம், கடலூா் - 1 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 88388 77874 என்ற எண்ணில் உதவிப் பொறியாளரையும், 86106 71056, 94436 72920 என்ற எண்களில் உதவி நிா்வாகப் பொறியாளா்களையும் தொடா்புகொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.