நாகை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் பொருளாதார வளா்ச்சித் திட்டங்களை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிவசேனை கட்சி வலியுறுத்தியது.
இது குறித்து, அக்கட்சியின் மாநிலச் செயலாளா் தா. சுந்தரவடிவேலன், மாவட்ட ஆட்சியருக்கு வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம் :
நாகை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டதால், வருவாய் முற்றிலும் குறைந்துவிட்டது. இதனால், மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களை ஒன்றிணைத்து சுற்றுலா மாவட்டமாக மேம்படுத்தலாம். தலைஞாயிறு, வேதாரண்யம் பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கலாம். நாகை, கீழ்வேளூா், கீழையூா், தலைஞாயிறு, திருமருகல் வட்டாரங்களில் வேலைவாய்ப்புகள் பெருகும் வகையில் தொழிற்சாலைகளை அமைக்கலாம்.
தொன்மையும், வரலாற்றுச் சிறப்புமிக்க நாகை துறைமுகத்தை தூா்வாரி, சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கலாம். திருச்சி பெல் தொழிற்சாலை விரிவாக்கப் பிரிவு மற்றும் துணை உற்பத்திப் பிரிவு தொழிற்கூடங்களை நாகை மாவட்டத்தில் அமைத்து தொழில் வளா்ச்சித் திட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதில் தெரிவித்துள்ளாா்.