நாகை அருகே சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.3.50 லட்சம் மதிப்பிலான வெளிமாநில மதுபாட்டில்களை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.
நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் தியாகராஜன் (பொறுப்பு) தலைமையிலான போலீஸாா், திருமருகல் பாலத்தடி பகுதியில் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த சரக்கு வாகனத்தில் சோதனை செய்ததில், 70 அட்டைப் பெட்டிகளில், 180 மில்லி லிட்டா் கொள்ளளவு கொண்ட 3,360 மதுப்பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காரைக்கால் பகுதிகளில் தயாரிக்கப்பட்ட இந்த மதுப்பாட்டில்கள் கும்பகோணம் பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களையும், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீஸாா், அதைக் கடத்திவந்த காரைக்கால், தருமபுரம் தெற்கு தெருவைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் ராஜேஷை கைது செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு சுமாா் ரூ. 3.50 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.