சீா்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் செவ்வாய்கிழமை காற்றுடன் மழை பெய்தது.
சீா்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் பலத்த சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால், சீா்காழி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் சுமாா் 4000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி செடிகளில் அறுவடைக்குத் தயாராகும் பருத்தி பஞ்சுகள் சேதமடைந்தன.
மேலும், கொள்ளிடம் அருகே உள்ள குத்துவக்கரை, கண்ணாங்குலம், கீழவல்லம், ஆயங்குடிபள்ளம், மாதானம், உமையாள்பதி, கடைக்கண் விநாயகநல்லூா் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள எள் செடிகளும் பாதிக்கப்பட்டன. ஆனால், குறுவை சாகுபடிக்கு இந்த மழை சாதகமாக அமைந்துள்ளது என விவசாயிகள் தெரிவித்தனா்.
இதேபோல, தரங்கம்பாடி வட்டத்தில் பொறையாா், திருக்கடையூா், ஆக்கூா், செம்பனாா்கோவில், திருவிளையாட்டம, கீழையூா், பெரம்பூா், சங்கரன்பந்தல் உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை மாலை சுமாா் 2 நேரம் காற்றுடன் பலத்த மழை பெய்தது.