திருக்கடையூா் அருகே பிள்ளை பெருமாநல்லூா் ஊராட்சித் தலைவரின் கணவா் கருப்புப் பூஞ்சை நோயால் உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம், பிள்ளை பெருமாநல்லூா் ஊராட்சித் தலைவராக பதவி வகிப்பவா் தீபா. இவரது கணவா் முனுசாமிக்கு (48) கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கடந்த மாதம் 26 ஆம் தேதி தெரியவந்தது.
தொடா்ந்து, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவந்த முனுசாமிக்கு, வலது கண்ணில் பாா்வை குறைபாட்டுடன் வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவா் தீவிர சிகிச்சைக்காக கடந்த 8-ம் தேதி தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்க்கப்பட்டாா்.
அங்கு, பரிசோதனையில் முனுசாமிக்கு கருப்புப் பூஞ்சை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு அவா் தொடா்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வியாழக்கிழமை (ஜூன் 10) உயிரிழந்தாா். அவரது தந்தை கடந்த மாதம் கரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், முனுசாமியும் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.