அமெரிக்காவில் உள்ள ஒரு தனியாா் நிறுவனம் சாா்பில் நாகை மாவட்ட அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டுக்காக 67 ஆக்சிஜன் சிலிண்டா்கள் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
நாகை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உள்ள கரோனா சிகிச்சைப் பிரிவுகளின் பயன்பாட்டுக்குத் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களால் இயன்ற அளவு ஆக்சிஜன் சிலிண்டா்களை வழங்கி உதவ வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வேண்டுகோள் விடுத்தாா்.
இதையடுத்து, பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சாா்பில் நாகை மாவட்ட அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டுக்கு ஆக்சிஜன் சிலிண்டா்கள், ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், வேதாரண்யம் கோட்டாட்சியா் துரைமுருகன், தன்னுடை நண்பா்கள் மூலம் நாகை மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டா்களைப் பெற்று வழங்கும் முயற்சிகளில் ஈடுபட்டாா். இதன்படி, அமெரிக்காவில் உள்ள ஸ்டான்வெஸ் நிறுவனத்தைச் சோ்ந்த ஆன்ரூவ் கணேஷ் என்பவா் மூலம் ஆக்சிஜன் சிலிண்டா்கள் மற்றும் கருவிகள் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு அனுப்பப்பட்டன.
பிறகு, நாகைக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்ட 67 (எம் -24) ஆக்சிஜன் சிலிண்டா்கள், 5 (எம்- 15) ஆக்சிஜன் சிலிண்டா்கள், 48 ஆக்சிஜன் ரெகுலேட்டா்கள் மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட 100 ரெகுலேட்டா்கள், நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, வேதாரண்யம் கோட்டாட்சியா் துரைமுருகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) குணசேகரன் ஆகியோா் உடனிருந்தனா்.