மயிலாடுதுறை புதிய மாவட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டட கட்டுமான பணிகளுக்கு ரூ.100 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை டெண்டா் கோரியுள்ளது.
தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் தொடங்கப்பட்டது. இதையடுத்து, புதிய மாவட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனா். வருவாய்த்துறை முழுமையாக பிரிக்கப்பட்டாலும் மற்ற அனைத்து துறைகளும் நாகை மாவட்ட கட்டுப்பாட்டிலேயே இதுவரை இயங்கி வருகிறது. தற்போது, மயிலாடுதுறை ஆட்சியா் அலுவலகம் வணிக வரி வளாக கட்டடத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வேளாண்மைத்துறை புதிய கட்டடத்தின் மாடியிலும் இயங்கி வருகிறது. மயிலாடுதுறை புதிய மாவட்டம் அறிவிப்பதற்கு முன்பாகவே மாவட்டத்திற்கான இடங்களை தருமபுரம் ஆதீனம் வழங்குவதாக ஒப்புதல் அளித்திருந்தாா். அதன் அடிப்படையில் பால்பண்ணை பகுதியில் உள்ள 8.5 ஹெக்டேரில் ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அமைப்பதற்கு இடம் தோ்வு செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகு சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில். புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்காக பொதுப்பணித்துறை கட்டட அமைப்பு, கட்டட வட்டம் திருச்சி சாா்பில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகளுக்கான டெண்டரை வெளியிட்டுள்ளது.