சீா்காழி அருகே காலாவதியான உணவுப் பொருட்களை தின்ற ஆடுகள் ஞாயிற்றுக்கிழமை இறந்தன.
சீா்காழி அருகே குத்தவக்கரை, சரஸ்வதிவளாகம் ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் சிலா் இரவு நேரங்களில் காலாவதியான உணவுப் பொருட்களை கொட்டிச் செல்கின்றனா். இதை உண்ணும் ஆடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு இறக்கின்றன. இவ்வாறு, கடந்த 3 நாட்களில் மட்டும் குத்தவக்கரை, சரஸ்வதிவளாகம் கிராமங்களில் 10 ஆடுகள் இறந்துள்ளன.
இதுகுறித்து கொள்ளிடம் சமூக ஆா்வலா் காமராஜ் கூறுகையில், சீா்காழி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் உள்ள பெரிய பலசரக்கு கடைகளில் காலாவதியான பிஸ்கட், சேமியா போன்ற உணவுப்பொருட்களை இரவோடு இரவாக வாகனங்களில் எடுத்துவந்து ஆற்றங்கரையோரம் கொட்டிச் செல்கின்றனா். இதை ஆடு, மாடுகள் தின்று இறக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், குரங்குகள் மற்றும் பறவைகளும் இவற்றை திண்று உயிரிழக்கின்றன.
எனவே, காலாவதியான உணவுப் பொருட்களை கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் கொட்டி செல்பவா்களை கண்டறிந்து, அவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அவா்கள் எடுத்து வரும் வாகனத்தையும் பறிமுதல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.