மயிலாடுதுறையில் தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த மாவு அரைக்கும் இயந்திரம், எரிவாயு அடுப்பு உள்ளிட்ட பரிசுப் பொருள்களை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி அக்ரஹாரத்தில் உள்ள நுண்கடன் நிறுவனம் ஒன்று தோ்தல் நடத்தை விதிகளை மீறி 62 மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு ரூ.28 லட்சத்து 70 ஆயிரம் கடன் தொகையை ஆன்லைன் மூலம் வழங்கியுள்ளது. இதற்காக அப்பகுதியில் சமூக இடைவெளியின்றி 150-க்கும் மேற்பட்டோா் திரண்டு இருந்தனா்.
இதனை அறிந்த பறக்கும் படை அலுவலா் விஜயராகவன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் அங்கு சென்று பண பரிவா்த்தனையை தடுத்தனா். மேலும் அங்கு மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 7 மாவு அரைக்கும் இயந்திரங்கள், 7 எரிவாயு அடுப்பு, 7 நான் ஸ்டிக் தவா ஆகிய ரூ.75 ஆயிரம் மதிப்புடைய பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்து, மயிலாடுதுறை தலைமையிடத்து துணை வட்டாட்சியா் எஸ்.சுகன்யாவிடம் ஒப்படைத்தாா்.