கருவேலங்கடை ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்துத் தரப்படாததைக் கண்டித்து சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்க உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.
நாகை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது கருவேலங்கடை ஊராட்சி. இந்த ஊராட்சியின் 5 மற்றும் 6-ஆவது வாா்டுகளில் சுமாா் 250-க்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இங்கு, கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக குடிநீா் முறையாக வருவதில்லையாம். அதேபோல, அவ்வப்போது கடல்நீா் உள்புகுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அப்பகுதி மக்கள் தங்கள் கிராமத்தில் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். பின்னா், தங்கள் பகுதிக்கான அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்றித்தராவிட்டால் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாகத் தெரிவித்தனா்.