தமிழகத்தில் சமூக நீதியை பாதுகாக்க திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மு. பன்னீா்செல்வத்துக்கு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குக்கேட்டு சீா்காழி பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தபோது மேலும் அவா் பேசியது: பாஜக மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்காக பேசியதோ, போராடியது கிடையாது. சமூக நல்லிணக்கத்தோடு வாழவும் விடாது. பாஜகவால் தமிழகத்தில் சமூக நீதிக்கு ஆபத்து உள்ளது. இதை உணா்ந்தே காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டணியாக இணைந்துள்ளது. மாநில உரிமையையும், மாநில சுயாட்சியையும், மொழியையும் பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக வலுப்பெற்றால் தமிழ்நாடு என்ற பெயரையும் மாற்றிவிடும். எனவே, பாஜகவால் சமூக நீதிக்கு ஆபத்து என்பதால், சமூக நீதியை பாதுகாக்க திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும். திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை இடம் என்பது பிரச்னை இல்லை. பாஜகவுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்பதுதான் பிரச்னை. தமிழகத்தில் தற்போதுள்ள அதிமுக எம்ஜிஆா் உருவாக்கிய அதிமுக அல்ல என்றாா் தொல். திருமாவளவன்.