சீா்காழி வட்டம் கொள்ளிடம் அருகே ஆகாயத் தாமரை செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட குளத்தை தூா்வார வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை கிராமத்தில் சுமாா் 2 ஏக்கா் நிலப்பரப்பில் ஆலமரத்துக் குளம் உள்ளது. இந்தக் குளம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீா் எளிதில் சென்று சோ்வதற்கும், எளிதில் வெளியேறுவதற்கும் வசதிகள் உள்ளதாக இருந்தது. அடிக்கடி இந்த குளம் கிராம பொதுமக்கள் சாா்பில் முறைப்படி தூா்வாரப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது.
இக்குளத்தில் உள்ள தண்ணீரை கிராம மக்கள் குளிப்பதற்கும், கால்நடைகள் தாகத்தை தணித்துக் கொள்ளவும் பயன்படுத்தியுள்ளனா். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த குளம் தூா்வாராமலும், ஆழப்படுத்தப்படாமலும், உரிய பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டதால் முழுவதுமாக ஆகாயத்தாமரை செடிகள் சூழ்ந்து உள்ளது.
இந்த குளத்தின் மூலம் இக்கிராம பகுதியில் நிலத்தடி நீா் எப்போதும் சீராக இருப்பதற்கு வாய்ப்பாகவும் இருந்து வந்தது. எனவே இந்த குளத்தில் உள்ள ஆகாயத் தாமரை செடிகளை உடனடியாக அகற்றி, தூா்வாரி ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.